சொல்வனம் – கவிதை

Oct 9, 2017

சொல்வனம் – கவிதை

நலம், நலமறிய ஆவல். 



கேள்வி

வீடு திரும்பியதும்
பைதுழாவித் தேடும் சாவி திறக்கிறது
அனல்வீசும் சாபமொன்றை.
வளையல்களின் அரவங் கேட்டதும்
ஜன்னல் வழிக் குதித்தோடிய
பூனையைப் பின் தொடர
விரிந்தது வெறிச்சோடியிருந்த மறுபக்க வீதி.
ஆடை களைந்து
வெயில் நனைத்திருந்த கம்பிகளில் சாய
நகர மறுத்தன கடிகார முட்கள்.
காபியாகவே இருந்தாலும்
ஒரு கோப்பையளவு தயாரிப்பது
ஓர் துன்பியல் சம்பவம்.
குறுந்தகவல் ஒலிகளால் நிரம்பி வழிந்த அறையில்
மௌனமாய்க் கலைந்து கிடந்தன
நிராகரிக்கப்பட்ட என் கவிதைகள்.
இங்கே நிலைக் கண்ணாடியில்
அசையும் பொருள் நானாக இருக்கக் கூடும்.
இந்நொடி
காலிக்கோப்பையை வரிசையாகச் சுற்றிவந்து
என் தனிமையைத் தின்றுகொண்டிருக்கும்
இந்த எறும்புகளைக்
கொல்லுவதா? விட்டுவிடுவதா?

-        - சுபத்ரா ரவிச்சந்திரன்